Wednesday 1 January 2014

வண்ணம் தீட்டப்படாத யானை



அவசர அவசரமாய்
முடிந்தேவிட்டது அரையாண்டு விடுமுறை…

பாதி வரைந்த காந்தி படமும்
தும்பிக்கைக்கு வண்ணம் தீட்டப்படாத யானை படமும்
சித்திரைவரை பாட்டி வீட்டு பரணில் காத்திருக்கனும்…

அடைகாக்க ஆரம்பித்த கருப்பு கோழி
இன்னமும் குஞ்சு பொறிக்கவில்லை
அடுத்த வாரம் பாட்டியிடம் போனில் கேட்கனும்…

பக்கத்து வீட்டு வேப்பங் கிளையில்
மாட்டிக் கொண்ட பட்டத்தை
பத்திரமாய் எடுத்து வைக்கச் சொல்லனும்…

தோட்டத்தில் தெற்கு மூளையில்
நட்டு வைத்த மாங்கொட்டை
நேற்றுதானே மண் முட்டியது முளைத்திருக்குமா..

பாட்டி வீட்டிற்கு வந்தால் மட்டும்
இந்த விடுமுறைகள்
நிறைய மிச்சம் வைக்கின்றன…