Wednesday 25 May 2011

தந்தையுமாகி


 காலையில் எழுந்து
மதிய உணவு சமைத்து
உன்னை எழுப்பி
பால் குடுத்து
காப்பி குடித்து
குளிக்க வைத்து
பவுடர் பூசி
வாக்கு எடுத்து தலைவாரி
விநாடிகளை உறுவாக்கி
குளித்து உடை மாற்றி
உன்னை சிரிக்க வைக்க
இரண்டு முத்தம் கொடுத்து
இதற்கு இடையே
இட்லி அவித்து
வீடு பெருக்கி
துணி துவைத்து
உனக்கு விடித்த
சட்னி அரைத்து
உனக்கு ஊட்ட வேண்டி
நானும் உண்டு...
ஓட்டமும் நடையுமாய்
காலை நேரத்து ரம்மியங்களை புறந்தள்ளி
ரணமாக்கும் கண்களை தாண்டி
உன்னை பள்ளியில் விட்டு
நானும் பணிக்கு விழைகின்றேன்
ஆசையாய்
கற்றறிந்த திறமைகளை மறந்து
பணம் பண்ணும் இயந்திரமாய்
சலனமின்றி இயங்கி முடித்து
சொல்லடிகல்
கண்ணடிகள்
தீண்டல்கள்
வயதின் இம்சைகள்
அனைத்தையும்
உன் நினைவின்
சுகத்தால் தடுத்து
இன்னும் வேகமாய்
வீட்டிற்கு ஓடி வந்து
உன்னை அள்ளி அணைத்து
முகம் கழுவி
உனக்கு அழகாய் உடுத்தி
வீட்டுப் பாடம்
கண்டிப்புடன் சொல்லி முடித்து
உன்னுடைய விளையாட்டை
உன்னுடன் சேர்ந்து
நானும் விளையாடி
உனக்கு பசிக்கையில்
உனக்கு பிடித்த உணவை
ருசியாய் சமைத்து
உனக்கு ஊட்டி
இரண்டு கவளம் நானும் முழுங்கி
கதை சொல்லி
தாலாட்டி உன்னை தூங்கவைத்து
பின் எழுந்து சென்று
என் முகம் கழுவி
பாத்திரம் விலக்கி
என் செல்லம் உனக்காக
என்னிடம் கொஞ்சும்
உடல் வலியை மறந்து
அனைத்தையும்
முடித்து
படுக்கும் முன்னே
உறங்கிப் போய்
அலாரம் அடிக்கும் முன்னே
காலையில் எழுந்து....

இதில் எதுவும்
எனக்கு வலிப்பதில்லை
உன்னையும் என்னையும்
வேண்டாம் என்று போன
உன் தந்தையின்
நினைவுகளில்
நீ மூழ்கிப் போவதை பார்க்கையில்
எனக்கும் வலிக்கிறது
நானும் அழுகின்றேன்
தாயான நான்
இன்னும் முழுதாய்
தந்தையாகவில்லையோ???
உனக்காக
உன் நம்பிக்கைக்காக
உன் சிரிப்பிற்காக
உன் அமைதிக்காக
நான் இழந்தது எதுவும்
இழப்பாகவே தெரியவில்லை
இந்த உன்
ஏக்கத்தை தவிர....

நின்று நிதானமாய்
சிறகடித்து பறக்கும்
என் ரசனைகள்..
உனக்கான உழைப்பில் அழகாகிப்போன
என் வாலிபத்தின் சுகங்கள்..
எனது வரையறைக்குள்
என்னால் தேடிக்கொள்ள முடிந்த
இந்த உடலின் மோகத் தீண்டல்கள்...
இதமாய்
என் இதயத்தில்
நிரம்பி வழிந்த
அன்பு நட்புக்கள்...
எனக்கான ஆதரவுகளும்...
நானான அடையாளங்களும்..
இவையெல்லான்
இழப்புகளாய் தெரியவில்லை – உன்னாலே
ஆனால்
உனது இந்த ஏக்கம் –
என்னை நானே
இழந்துவிடுவேனோ???



Thursday 19 May 2011

மாடர்ன் காதல்


இது ஒரு
மாடர்ன் காதல்
வார இறுதியில்
இருளின் வெளிச்சத்தில்
இடை தழுவி
ஆட்டம் போட்டு
மோகம் கொள்ளும்..

மற்ற நாட்களில்
கைப்பேசி
தூது சொல்லும்
குருஞ்செய்தி தென்றல் வீசும்
‘சொல்லுடா செல்லம்
‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நீளும் மௌனம்
இவைகள் இரவைக் கரைக்கும்...

அன்றைய வேலை தந்த
வேர்வையின் எரிச்சலூடே
கனவுகளில் காதல் கொள்ள
தூங்கிப் போவோம்....

ஜாதியும் மதமும்
இல்லாமல் போன
எங்களின் நகரத்து காதல்களில்
பணமும்
நிலையான வாழ்வின் உறுதிப்பாடுமே
காதலை கல்யாணம்வரை
கட்த்திச் செல்லும் பாலமாகின்றன...

எங்களின் காதலை
பெற்றோர் பிரிக்க முடியாது
நாம் நானாகி
நாங்களே பிரித்துக் கொண்டால்தான்...

இயந்திரமாய்
இயங்கிக் கொண்டிருக்கும்
எங்களின் காதலிலும்
அன்பு இருக்கிறது
ஏக்கம் இருக்கிறது
மோகம் இருக்கிறது
நிறைய
வலியும் இருக்கிறது....
.

Saturday 7 May 2011

உன் கண்களில் வழியும் கண்ணீரை

உனக்கு தெரியுமா 
அம்மா
உன் கை பிடித்து நடக்க
இன்றும் ஆசை இருக்கு...

நீ சமைக்கும் போது
உன் கால்களை
கட்டிக் கொள்ளும் சுகம்...

உன் முந்தானை பிடித்து
உன் பின்னாலேயே
வீட்டை வலம் வரும் நினைவுகள்...

ஒவ்வொரு முறை
நீ என்னை முதமிட்டு
உச்சி முகரும் போதும்
என் நாசி தீண்டும் உன் வாசம்...

உன் மார்பில் 
முகம் புதைத்து
இடையை கட்டிப் பிடித்தால் மட்டுமே
தூக்கம் வரும் அந்த இரவுகள்...

இருவரும் 
ஒன்றாய் குளிக்கும்போது
என்னை சில்லிட வைக்கும்
உன் நீண்ட கூந்தலின் ஈரம்...

புரியாத தருண்ங்களில் 
உன் கண்களில் வழியும் கண்ணீரை
தொடைத்து விட்டு முத்தமிட்ட்து....

Monday 2 May 2011

இந்த சமுதாய கோபம் தேவையானதா


ஒரு ருத்ரதாண்டவம்
சுற்றி நடக்கும் ஊழலும்
மாறிப் போன மனிதமும்
பணம் தந்த மமதையில் வந்த ஆணவம்
அத்த்னையும் தவறாய் இருக்கிறது
தலைவன் எல்லோரும் தவறாக சுயநலமாய்
செய்திடவா சூரசம்காரம்
பத்து தலை என்று இருமார்ந்து இருந்தேன்
இங்கே என் வாளுக்கு
அத்தனை தலையும் வேண்டும் போல
கொஞ்சம் அசதியாய்தான் இருக்கிறது
இது சாத்தியமா
இந்த சமுதாய கோபம் தேவையானதா