அதோ இறந்து கிடக்கும் என்னை
எட்டி நின்று பார்க்கின்றேன்
ஏதும் புரியாமல்
என் புன்னகை மட்டும் மாறாமல்
எல்லோரும்
என்னை சுற்றி
ஒப்பாரிகள்
அதோ
என்னை பெற்றவர்கள்
அழுகையூடே
தங்களின் பாசத்தை புலம்பிக் கொண்டு
மாறாத என் புன்னகை
மெல்லக் கரைகிறது
திக்குத் தெரியாமல்
மூலையில் என்னவள்
என்ன செய்வாள் இனி
நான் தூங்குவதாய்
சிணுங்களோடு சிரித்துகொண்டே
என்னை எழுப்புகிறாள்
என் தாயான
என் மகள்
அத்தனை புன்னகையும்
காணாமல் போனது
அதோ இறந்து கிடக்கும்
என்னை பார்த்து
நான் அழுகிறேன்
முன்னர் பல முறை
நான் இறந்திருக்கிறேன்
என் சுயம் இழந்த
ஒவ்வொரு முறையும்
நான் இறந்துபோயிருக்கிறேன்
அத்தனை முறையும்
என்னோடு நான் இருந்தேன்
மீண்டும் புதிதாய் பிறந்தேன்...
இது நான் தனியாக
என்னை அங்கே விட்டுவிட்டு
இது நிரந்தரம்
நிஜம் சுடுகிறது...
முடிந்தே விட்டது
அத்தனை பலத்தையும்
ஒன்றாய் சேர்த்து
விழித்து எழுகின்றேன்
தட்டி எழுப்புகிறாள்
என் தாயானவள்
அத்தனை கனவும் கலைந்து
நிஜம் எதிரில் நிற்கிறது
நான் சிரிக்கின்றேன்
வெல்வேன் இனி
இறப்பின் வலி அறிந்தவனாய்...