இன்று கொள்ளி வைத்து
நாளை பால் ஊற்றி
பதினைந்தாம் நாள் காரியம் செய்து
வருடம் ஒன்று ஆனதும் திதி கொடுத்து
அம்மாவாசைதோறும் பிண்டம் வைக்கும்
சராசரி தமிழன் நான்...
எனக்காக உடல் கிழித்த
உதிரம் ஊட்டிய
என் அன்னைக்கே
இவ்வளவுதான் செய்ய முடியும்
என் தொப்புள்கொடி உறவுகளுக்கு மட்டும்...
கொத்து கொத்தாய் கொன்றான்
என் இனப் பெண்டுகள்
சிதைக்கப்பட்டனர்
எங்குப் பார்க்கினும்
உடல்களும் சதைகளும் உதிரமும்
சிதறிக் கிடக்கின்றன
எல்லாம் முடிந்த பின்னும்
துன்பங்கள் தீரவில்லை
கேள்விகளும் முடியவில்லை..
எல்லாம் தெரிகிறது
வருத்தங்கள் தொடர்கிறது
கோபமும் தெரிக்கிறது
வழிதான் தெரியவில்லை...
எனது இறப்பிற்கே
என்னால்
இறங்கற்பா மட்டும்தான் பாட முடிகிறது...
என் கையை வெட்டினாலுமே
சிரித்து சகித்து வாழ
பழக்கப்பட்டிருக்கிறோம்
ஈழத்து உறவின் ஆவிகளே
மிச்சமிருக்கும் தண்டிக்கப்பட்டவர்களே
நான் வாழ்வதே
ஒரு அடிமை வாழ்க்கை...
உணர்வுகளை கழட்டி
உறையில் வைத்துவிட்டு
உடல் வளர்க்க கிளம்பிவிட்டேன்....