Monday 6 June 2011

மற்றவைகளில் சொன்னவை சில...

காலை தூக்கத்தில்
என் கையை இழுத்து
உன் தலையணையாக்கி
நீ தூங்குவது
ஞாயிற்றுக் கிழமைகளின் சந்தோசங்களில் ஒன்று...

என் போர்வைக்குள் புகுந்து
என் மார்பை
உன் படுக்கையாக்கிக் கொண்டு
என்னோடு சேர்ந்து
நீ தூங்கிப்போகும் சுகம்...

என் முதுகில்
ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு
போர்வை நுணியால்
காதில் சிலிர்க்கவைக்கிறாய்...

ஒன்றுக்கு
இரண்டாய் முத்தமிடுகின்றாய்
என் கன்னத்தை
கிள்ளி தின்னும் காட்சி...

நீ தூங்குவதை
நான் ரசிப்பது
என்னை மழலையாக்கி
நீ மகிழ்வது...

தலைவருடினால்
சுருண்டு
என் மார்போடு ஒட்டிக் கொள்கிறாய்...

உன் பொம்மைகளை அடுக்கி
எனக்கு கதைகள் சொல்லி
விளக்கங்கள் கேட்கிறாய்...

சிரித்து சிரித்து
என்னையும் சிரிக்க வைக்கிறாய்
நேற்றைய துயரங்களை மறக்கிறேன்...

கை சூப்பியதற்கும்
உன் நட்போடு சண்டையிட்டதற்கும்
மன்னிப்பு கேட்டு மிரள வைக்கிறாய்...

தூங்குவதாய் பசாங்கு செய்து
என் கண்களுக்கு திரை போட்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்...

கட்டி பிடித்து
சண்டை போட்டு
உன்னை ஜெயிக்க விட்டு...

கை கோர்த்து
கற்றில் வேகமாய் வீசி
என்னை நட்த்தி வருவாய்...

ஆடுவாய்
அசைந்து ஆடுவாய்
என்னையும் ஆட வைப்பாய்...

உதட்டு சத்தத்தில்
ஆட்டோ ஓட்டி
பல்லிடுக்கில் என் விரல் கடித்து
என் அசட்டு வலிக்கு
தடவிக் குடுத்து
விரலில் முத்தமிட்டு...

மற்றவைகளில்
சொன்னவை சில...

இன்று ஞாயிற்றுக்கிழமை
நாளை நீ விழிக்கும் முன்னே
இரை தேட
நான் பறந்து விடுவேன்
அடுத்த ஞாயிறுக்காக காத்திருபேன்
உன்னைப் போலவே....

3 comments:

Ranioye said...

உனக்கு நாள் கணக்கு தெரியும்
எனக்கு தெரிந்ததெல்லாம்
நீ மட்டும்தானே
வாசலிலே காத்திருக்கேன்
- சேய் பறவை

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

அ.முத்து பிரகாஷ் said...

இரை தேட இதயம் விற்று....


விரைவில் கூடு திரும்புங்கள்.

Post a Comment