Thursday 26 June 2014

கல்லறைகளும் காலியில்லை

வாழ்வதற்குதான் வீடு கிடைக்காமல் இருந்தது
இப்போதெல்லாம்
கல்லறைகளிலும் இடம் கிடைப்பதில்லை
ஊர்விட்டு ஊர் போய்
இடம் பிடிக்கின்றன இறந்து போன உடல்கள்...

புதைக்கப்பட்டவர்களில்
அமிழ்ந்து போனவை பல
உயரமாய் கட்டப்பட்டவைகள் மட்டும்
எழுந்து நிற்கின்றன... 

காணாமல் போனது மனிதர்கள் மட்டுமல்ல
காலடிகளில் காலப் போக்கில்
கல்லறைகளும்தான்...

காய்ந்து போன மலர்களும்
மிச்சமிருக்கும் மெழுகுகளும்
சாய்ந்து நிற்கும் சிலுவையும்
பல வலிகளுக்கும்
உப்பு கரிக்கும் கண்ணீருக்கும் சாட்சியாகின்றன...

அழிந்து போன கல்லறைகளுக்கு நடுவே
அலங்கரிக்கப்பட்டிருக்கும் சில
ஆடம்பரமாய் ஆர்பரிக்கின்றன...

ஒரே மாதிரி 
வெள்ளை சிலுவையோடு வரிசையாய் 
பெயரிடப்படாத அந்த மூன்று கல்லறைகளும்
ஒரே கல்லறைகளுக்குள் உறங்கும்
ஒரு மாதமேயான அக்கா தம்பியும்
என்னவோ சொல்கின்றன...

No comments:

Post a Comment